வரவு- செலவு திட்ட விவாதம் தொடர்பில் கருத்துரைக்கும் போது எமது நாடு அதேபோன்று உலக நாடுகள் தற்போது எதிர்கொண்டுள்ள நிலைமை தொடர்பிலும் சிந்திக்க வேண்டியது அவசியம் என்று, அமைச்சர் மின்சக்தி அமைச்சர் காமினு லொக்குகே தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
முதலாம் உலக போர், இரண்டாம் உலக போரைவிட கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை அதிகம். நாம் மட்டுமன்றி உலகில் பலம்பொருந்திய நாடுகளான அமெரிக்கா, ரஸ்யா அதேபோன்று ஐரோப்பிய நாடுகளை எடுத்துக்கொண்டால் 1000க்கும் மேற்பட்டவர்கள் மரணித்துள்ளனர்.
எந்தளவு தொழில்நுட்பம், விஞ்ஞானம், பல நிறுவனங்கள் காணப்பட்டாலும் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலை தடுப்பதற்கான வழிகள் இருக்கவில்லை.
நமது நாட்டில் அத்தகைய வசதிகள் காணப்படாவிட்டாலும்கூட இன்றைய நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்துள்ளது.
முதன் முதலாக கொரோனா வைரஸ் தொற்றாளர் இனங்காணப்பட்டபோது நாம் அனைவரும் அச்சமடைந்தோம். அந்த தொற்றாளரை அழைத்து சென்ற வாகன சாரதி எனது ஊருக்கு அருகிலுள்ள ஊரிலேயே வசித்து வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவரது மகன் ஆனந்தா கல்லூரியில் கல்வி பயின்றார்.
அரசாங்கத்துக்கு பாடசாலைகளை மூட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. முதல் தொற்றாளர் சுகமடைந்து நாடு திரும்பியபோது கொரோனா தொற்றுப்பரவல் முடிவடைந்து விடும் என்று நாம் நினைத்தோம். எனினும் நாளுக்கு நாள் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே சென்றது.
சித்திரை புதுவருடப் பிறப்பின் பின்னர் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலானது நாம் எதிர்பார்க்காத அளவு பாரிய தர்க்கத்தை ஏற்படுத்தியது.
நாளொன்றுக்கு 3000க்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். எனினும் ஜனாதிபதி கோட்டாபய ராஜப்கஸ தலைமையிலான அரசாங்கம், பிரதமர் மஹிந்த, ராஜபக்ஸ, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ ஆகியோர் எடுத்த முயற்சிகள் காரணமாக, நாட்டின் சனத்தொகையில் 70 சதவீதமானவர்களுக்கு தேவையான கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொடுப்பதற்கு முடிந்தது.
நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கும்வரை, தான் தடுப்பூசி செலுத்திக்கொள்ள போவதில்லை என்று, எதிர்க் கட்சித் தலைவர் அறிவித்திருந்தார். எனினும் அவரும் தொற்றுக்குள்ளானதன் பின்பு தடுப்பூசியை செலுத்திக்கொண்டார்.
இன்று எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள அனைவரும் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.
தடுப்பூசி திட்டம் காரணமாக நாளாந்தம் இனங்காணப்படும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை கடந்தவாரம் 500க்கும் குறைவாகக் காணப்பட்டது. இவ்வாரம் அது 600ஆக அதிகரித்துள்ளது.
தேவையானளவு ஆர்ப்பாட்டங்களை நடத்த முடியும் ஆனால் கொரோனா வைரஸ் பரவலை மீண்டும் ஏற்படுத்தி விடாதீர்கள்.






