கொட்டஹென பொலிஸ் பிரிவில் இன்று (வியாழக்கிழமை) மாலை 6 மணி முதல் மீள் அறிவித்தல் வரும் வரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தகவல் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரொனா வைரஸின் தாக்கம் அதிகரித்ததைத் தொடர்ந்து, கம்பஹா மாட்டம், கட்டுநாயக்க பொலிஸ் பிரிவு, குளியாப்பிட்டியில் சில பகுதிகளுக்கு ஏற்கனவே ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
அத்தோடு களுத்துறை மாவட்டத்தில் 6 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்களாக நேற்று தகவல் அறிவிக்கப்பட்டன.
மேலும் உடன் அமுலுக்கு வரும் வகையில் கொழும்பின் 05 பிரதேசங்களுக்கு இன்று காலை தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதன்படி, மட்டக்குளி, முகத்துவாரம், வெல்லம்பிட்டி, புளூமென்டல் மற்றும் கிரேன்பாஸ் பகுதிகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில், கொட்டஹென பொலிஸ் பிரிவிலும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






